Friday 29 October, 2010

தோழியர் நினைவுகள்...


பள்ளியில், கல்லூரியில், பணிபுரியும் இடத்தில்... அபூர்வமாய் சில தோழிகள் எனக்கு வாய்த்ததுண்டு. நம் சமூக அமைப்பின் கட்டாயத்தால், குறிப்பிட்ட காலக்கட்டத்தில் எங்களிடையே நிகழ்ந்தே தீரவேண்டிய இடைவெளி நிகழ்ந்திருக்கிறது. வெற்றிடத்தை நிரப்ப அவ்வப்போது புதிய தோழிகள் கிடைத்துக் கொண்டுதானிருக்கிறார்கள். இருப்பினும், பழைய தோழிகளின் நினைவுகள் இப்போதும் மனதில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. அப்படி ஒரு தருணத்தில், என் மனதில் தோன்றியதுதான் கீழுள்ளவை. இது எப்போதும் நினைவில் இருக்கும், இப்போதும் தொடர்பில் இருக்கும்... என் தோழிகளுக்கு சமர்ப்பணம்...


ஒரு சிறு புன்னகை...
தயங்கிய வார்த்தைகள்...
மெல்லிய பெயர் அறிமுகங்கள்...
அலுவலக முதல்நாள்.

தெரிந்ததை சொல்லிகொடுத்தாள்.
தவறுகளை சுட்டிகாட்டினாள்.
முதல்முயற்சியில் தட்டிக்கொடுத்தாள்.

உணவு இடைவெளி...
பரிமாறப் பட்டது -
கொண்டுவந்த உணவும்,
உறவுக் கதைகளும்.

அறிவுரைகள் சொல்வாள்.
நாகரீகம் கற்றுக்கொடுத்தாள்
என் மாற்றங்களில் என்னையே வியக்கவைத்தாள்.
அவசர தருணங்களில் உதவிக்கை நீட்டினாள்.

தோள்பிடித்து உரையாடுவாள்.
வயிறுகுலுங்க சிரிக்கவைப்பாள்.
சில கருத்துகளை விவாதித்துக் கொள்வாள்.
சிறிதாய் சண்டையிடுவாள்.

தவறுகளுக்கு மன்னிக்கச் சொல்வாள்.
வாழ்த்துச் சொல்லி பிறந்தநாளை நினைவூட்டுவாள்.
பண்டிகை தினங்களில் கைபேசிக் குறுந்தகவல் அனுப்புவாள்.
வருஷவிடுப்பிற்கு ஊர்செல்பவள் பரிசுகளுடன் திரும்புவாள்.

பிள்ளைப்பேறுக்காக அலுவலகம் விட்டு,
கண்ணீரில் விடைபெற்று,
சில மாதப்போக்கில் மின்னஞ்சலில் அனுப்பிவைத்தாள் -
தன்பிள்ளையின் புகைப்படத்தை.

காலம் கடந்தது.
நிறையப்பேர் வந்துபோனார்கள்.
இன்றுவரையிலும் அமையவில்லை.
உன்னைப்போல் ஒருதோழி!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

என் தோழி விடை பெறுகிறாள்...
வாழ்வின் வேறு தளத்திற்கு செல்கிறாள்...
சிரித்து அனுப்பிவிட்டேன்.
நினைவுகளை மட்டும் வைத்துக்கொண்டு...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

No comments: